இந்த 30 நதிகளை இணைத்தால் தண்ணீர் பஞ்சமின்மை சாத்தியமே!








மாலயத்திலிருந்து குமரி வரை ஓடும் இந்தியாவின் ஜீவ நதிகளை இணைப்பது குறித்த பூர்வாங்க முடிவுகளுக்கு இப்போதுதான் வந்துள்ளது இந்திய அரசு. நாட்டின் நதிகளை இணைத்துவிட்டால் விவசாயமும், பொருளாதாரமும் தழைத்தோங்கும் என்பதை இதுவரை நாம் செவிவழிச் செய்தியாகவும், வல்லுனர்களின் கூற்றாகவும் கேள்விப்பட்டிருப்போம். இத்திட்டத்தை செயல்படுத்துவதன் முதல்கட்ட நகர்வாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு 2009ம் ஆண்டிலேயே மத்திய அரசிடம் அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன. நாட்டில் உள்ள முப்பது ஜீவநதிகளை இணைக்க சாத்தியக்கூறுகள் இருப்பதாக அந்த ஆய்வறிக்கை கூறியது. இமாலயத்த பிறப்பிடமாக கொண்டிருக்கும் கோசி, காக்ரா, கங்கா, யமுனா,மானஸ், சாரதா, தீஸ்தா உள்ளிட்ட 14 ஆறுகளையும், தென்னிந்தியாவின் கோதாவரி, கிருஷ்ணா, காவிரி, பாலாறு, பெண்ணாறு உள்ளிட்ட 16 ஆறுகளையும் இணைப்பதற்கான வழிகள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால் இந்த ஆய்வுகள் முழுவடிவம் பெறுவதற்குள் மூன்று அரசுகள் மாறிவிட்டன. திட்டமதிப்பிலும் அபார உயர்வு ஏற்பட்டது.





மகாநதி-கோதாவரி நதிகளையும், கோதாவரி-கிருஷ்ணா நதிகளையும் இணைக்க முடியும். கோதாவரி-கிருஷ்ணா நதிகளை மூன்று இடங்களில் இணைக்க முடியுமென்றும் ஆய்வறிக்கை கூறியிருக்கிறது. ஸ்ரீசைலத்தில் கிருஷ்ணா நதியுடன் பெண்ணாறு நதியையும், சோமசீலம், கிராண்டு, அனிகட் பகுதியில் பெண்ணாறு-காவிரி நதிகளையும் இணைக்க முடியும். கட்டளை மற்றும் குண்டாறு ஆகியவற்றுடன் காவிரி-வைகை ஆறுகளை இணைக்க முடியும். மேலும் பம்பா-அச்சன்கோவில்-வைப்பாறு, நேத்ராவதி-ஹேமாவதி, பேட்தி-வாரதா ஆறுகளின் இணைப்புக்கும் சாத்தியம் இருப்பதாக தெளிவுபடுத்தியது அந்த ஆய்வறிக்கை.





மேற்சொல்லப்பட்ட அனைத்து நீர் வழிகளும் கடல் மட்டத்திலிருந்து 300 மீட்டர் உயரத்தில் இருக்கிறது என்றால், எவ்வளவு ஆராய்ச்சிகளுக்கு பிறகு இதன் வடிவமைப்பு திட்டம் தீட்டப்பட்டிருக்கிறது என்பது உங்களுக்கு புரியும்.





ஆனால் நாட்டின் இரத்தநாளங்களாக விளங்கும் நதிகளை இணைப்பதில் மறைந்த நம் அப்துல்கலாம் ஐயாவும் கூட ஆர்வமாகவே இருந்தார். தன்னுடைய விஞ்ஞான அறிவினைக் கொண்டு அவர் சில ஆய்வுகளையும் மேற்கொண்டிருந்தார். மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் பல்வேறு கருத்துக்கள் முட்டி மோதுவதில் ஆச்சரியம் இல்லை. நதியிணைப்பு என்பது சாத்தியமற்ற ஒன்று, அது மிகப்பெரிய சவால் என சொல்லுவதில் அர்த்தமில்லை என்றார் கலாம். இந்தியாவின் 54 கோடி இளைஞர்கள் ஒன்றுபட்டு நின்றால், இத்திட்டத்தை செயல்படுத்தி வெற்றியடைய முடியும். இளைஞர் சமுதாயத்தால் மட்டுமே எந்த பிரச்சினைகளையும் தைரியத்துடன் எதிர்கொண்டு வெற்றி அடைய முடியும் என நம் இளைஞர்கள் மீது தன் நம்பிக்கை விதையை ஊன்றிச் சென்றார்.





நதிநீர் இணைப்புத் திட்டத்தால் கிடைக்கும் பலன்கள்:





1) வெள்ள அபாயத்தை கட்டுப்படுத்தக்கூடியது.





2) 3.5 ஹெக்டேர் விவசாய பாசன நிலங்களுக்கு கூடுதலான தண்ணீரை பயன்படுத்த முடியும்.





3) 14 கோடி ஹெக்டேராக இருக்கும் சாகுபடி நிலப்பரப்பை 17.5 கோடி ஹெக்டேராக அதிகரிக்க முடியும்.





4) நாட்டில் உள்ள எந்த மாநிலமும் வறட்சியால் பாதிக்கப்படாது.





நீர்ப்பெருக்கு இல்லாத அல்லது வற்றிய ஆறுகளை உயிர்ப்பிக்க முடியும்.





5) ஆற்றங்கரையில் வசிக்கும் மீனவர்களின் பொருளாதாரம் மேம்படும்.





6) 10 மீட்டர் ஆழமும் 120 மீட்டர் அகலமும் கொண்ட நீர்வழிச்சாலைகள் கட்டமைக்கப்படும்.





7) நீர்வழிப்பாதைகள் மூலம் உள்நாட்டு வணிகமும், சுற்றுலா துறையும் வளம் கொழிக்கும்.





8) வாகனப் போக்குவரத்து குறைவதன் மூலம் 90% எரிபொருளை சேமிக்கலாம்.





9) 50 மில்லியன் பொது மற்றும் தொழிற்சாலை சார்ந்த மக்களுக்கு தடையின்றி தண்ணீர் கிடைக்கும்.





10) தண்ணீரின் உவர் தன்மையை குறைக்கலாம்





11) சுற்றுச்சூழல் மாசடைவதை தடுக்கலாம்.





12) 3 கோடி மெகாவாட் மின்சாரத்தை ஹைட்ரோ பவர் மூலம் உற்பத்தி செய்ய முடியும்.





மாற்றுக் கருத்துகள்:





நதிநீர் இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த தோராயமாக பத்து லட்சம் கோடி ரூபாய் நிதி தேவைப்படும்.





வட-தென் நதிகளை இணைப்பதற்கு 15 ஆயிரம் கிலோ மீட்டர் அளவுக்கு கால்வாய் தோண்ட வேண்டும்.





இதன் மூலம் 17,500 கன மீட்டர் தண்ணீர் கூடுதலாக கிடைக்கும் என்றாலும், கால்வாய் தோண்டும் பகுதிகளில் வசிக்கும் மக்களின் வாழ்விடங்களை பறிக்க நேரிடும்.





நதியின் இயற்கைச் சூழல் பாதிக்கப்படும்.





கங்கை நதியில் அணை கட்டுவதால், இமயமலைக் காடுகளுக்கு இந்த அணைகள் பெரிய ஆபத்தாக அமையும்.





இத்திட்டம் பருவமழைப் பொழிவுகளை பாதிக்கக்கூடும்.





நதிகள் இணைப்பித் திட்டத்தை செயல்படுத்துவதில் இவ்வாறான மாற்றுக்கருத்துக்களும், அச்சுறுத்தல்களும் நிலவுவதால் தான் மத்திய அரசு, இத்திட்டத்தை செயல்படுத்த தயங்குகிறது. மேலும் இத்திட்டத்தை செயல்படுத்துவதில் சர்வதேச அரசியலும் அடங்கியிருக்கிறது. எனவே நதிகளை இணைப்பதற்கு பதிலாக இப்போதுள்ள நதிகளின் தண்ணீரை சிக்கனமாகவும், பயன்பெறும் வகையிலும் உபயோகிக்கும் உத்திகளை முதலில் கையாள வேண்டும். அந்தந்தப் பகுதிக்கு ஏற்ற பயிர்களை சாகுபடி செய்ய வேண்டும். சொட்டுநீர் பாசனத்தை ஊக்குவிக்கவேண்டும். ஏரிகளில் தண்ணீரை தேக்கிப் பயன்படுத்தும் பழையகால பாசன முறையை ஊக்குவிக்க வேண்டும். ஏராளமான குளம், குட்டை போன்ற நீர்நிலைகளை உருவாக்கி மழை நீரை சேகரிக்க வேண்டும் என்றெல்லாம் மத்திய அரசு நினைக்கிறது. ஆனால் நடந்துகொண்டிருப்பதோ வேறு.





பருவமழை காலத்தில் பெருத்த மாற்றம் ஏற்பட்டிருப்பதால், மழைநீர் கிடைப்பதில் சிக்கல்.





அந்தந்தப் பகுதிக்கு ஏற்ற பயிர்களை சாகுபடி செய்யப்படுவதில்லை. ராகி என சொல்லப்படும் கேழ்வரகு அதிகம் விளையும் கர்நாடகத்து மண்ணில் நெற்பயிர்கள் விளைந்து கொண்டிருக்கிறது.





கேழ்வரகு சாகுபடிக்கு அதிக தண்ணீர் தேவைப்படாது. ஆனால் நெற்பயிர் சாகுபடி முழுக்க முழுக்க தண்ணீரையே ஆதாரமாக கொண்டுள்ளது. அம்மாநிலத்தின் லாப நோக்கிற்காக 80களில் பயிர் மாற்றம் செய்யப்பட்டது. இதனால் கர்நாடக பாசன வசதிக்கே காவிரி நீர் முழுவதும் தேவைப்படுகிறது. நெற்களஞ்சியம் என அழைக்கப்படும் தமிழக டெல்டா மாவட்டங்களுக்கு காவிரி எட்டாக்கனியாகி விட்டது.





கடந்தாண்டு பட்டீசீமா நதிநீர் இணைப்புத் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்திக் காட்டியது ஆந்திர அரசு. 173 நாட்களில் 174 கி.மீ. தொலைவுள்ள கால்வாய் தோண்டப்பட்டு, கோதாவரி ஆற்றின் நீரை பகிர்ந்தளித்து ராயலசீமா மாவட்ட வறட்சி போக்கப்பட்டது. இத்திட்டத்தில் 24 பிரமாண்ட பம்ப்புகள் பயன்படுத்தப்பட்டன. ஆந்திராவின் இந்த பம்ப் ஹவுஸ்தான் ஆசியாவிலேயே மிகப்பெரிய பம்ப் ஹவுஸ் ஆகும். சமீபத்தில் இந்த சாதனை திட்டமானது லிம்கா புத்தகத்திலும் இடம்பிடித்தது குறிப்பிடத்தக்கது.





ஒரு மாநிலத்தின் குறிப்பிட்ட பகுதியில் நிறைவேற்றப்பட்ட நதிநீர் இணைப்புத் திட்டமே சாதனை படைத்தது என்றால், ஒரு நாடு தழுவிய நதிநீர் இணைப்புத் திட்டம் பலன் கொடுக்காமல் போய்விடுமா? சர்வதேச அரங்கில் சாதனை படைக்காமல் போய்விடுமா? எனவே தற்போது உள்ள விவசாயப் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு மத்திய அரசு செயல்பட வேண்டும், செயல்படுத்தவும் வேண்டும்.





 




Comments

Popular posts from this blog

காகம் ஏன் உங்களைத் தேடித்தேடி எச்சமிடுகிறது தெரியுமா?

இந்த ராசிக்காரங்க முதுகில் குத்தும் குணம் உள்ளவர்களாம்... இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க.

இரவில் தூங்கும்போது சொல்ல வேண்டிய மந்திரம்